ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதி T20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் 55 பந்துகளில் சதம் அடித்துள்ளார்.
இது சர்வதேச T20 கிரிக்கெட் அரங்கில் சூர்யகுமார் யாதவ் பெறும் 4 ஆவது சதம் ஆகும்.
இதன் மூலம் சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா மற்றும் கிளென் மேக்ஸ்வெல்லுடன் இணைந்து T20 அரங்கில் அதிகம் சதம் விளாசிய வீரர் ஆனார்.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முத்தரப்பு போட்டிகள் கொண்ட தொடரில் பங்கெடுத்து வருகின்றது.
இதில், முதலில் ஆரம்பமாகியுள்ள T20 தொடரின் முதல் போட்டியானது மழையால் கைவிடப்பட்டது.
பின்னர் இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா டக்வெத் லூயிஸ் முறைப்படி வெற்றி பெற்றது.
இந் நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற மூன்றாவது T20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ஓட்டங்களை குவித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணியால் 13.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது.
இதனால் இந்திய அணி 106 ஓட்டங்களினால் வெற்றி பெற்று, தொடரை 1:1 என்ற கணக்கில் சமப்படுத்தியது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 17 ஆம் திகதி ஜோகன்னஸ்பர்க்கில் ஆரம்பமாகும்.