சர்வதேச புலம் பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு நேற்று( 18 ) பதுளை ஹாலி-எல வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
இதன் போது கருத்துரைத்த அவர்,
பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்பிய சக்தி நீங்களே என்ற தொனிப்பொருளின் கீழ் இம்முறை புலம்பெயர்ந்தோர் தினம் கொண்டாடப்படுகின்றது. பெருந்தோட்டத்தை பொறுத்தவரை பதுளை ஹாலி எல வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் மட்டுமே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்நிகழ்வில் பங்கேற்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். வெளிநாட்டில் பணிப்பெண்களாகவோ அல்லது வேறு தொழில்களுக்கு செல்பவர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்திருத்தல் கட்டாயமானதாகும். இவ்வாறு பதிவு செய்யப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கமும் அதிகாரிகளும் பொறுப்புக்குரியவர்களாக இருப்பார்கள்.
இருந்த போதிலும் அனேகமானோர் இடைத்தரகர்கள் மூலமாக முறையற்ற ரீதியில் செல்கின்றனர்.அவ்வாறு தொழிலுக்காக செல்பவர்கள் அங்கே பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து தாய் நாடும் திரும்ப முடியாது முறையான ஊதியமும் இன்றி அவதியுறுகிறார்கள்.இவர்கள் தொடர்பில் தகவல்கள் பெற்றுக் கொள்வதிலும் பலவித சிரமங்கள் ஏற்படுகின்றது. வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்ல இருப்பவர்கள் முறையான அறிவித்தல் மற்றும் வழிகாட்டுதலுடன் செல்வது அவசியம் ஆகும் .இது தொடர்பில் பல அறிவுறுத்தல் வேலைத்திட்டங்கள் சர்வதேச தொழிலாளர் சம்மேலனத்துடன் (ILO) இணைந்து தேசிய தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வெளிநாட்டில் பணிபுரியும் நம் நாட்டவர்களின் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வயதில் மூத்தோருக்கு கண்ணாடி, சக்கர நாற்காலியும் ,சித்திரப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பணப்பரிசிலும் வழங்கி வைக்கப்பட்டது .