வடகிழக்குச் சூடானில் அணைக்கட்டு ஒன்று உடைந்ததில் 60ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந்த நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி 20 கிராமங்கள் அழிந்துபோயுள்ள நிலையில் 50 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாகப் பலர் காணாமல் போயுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமெனச் சூடானின் மத்திய சுகாதார அமைச்சு அச்சம் வெளியிட்டுள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், நிவாரண உதவிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அணைக்கட்டு உடைந்ததில் வடகிழக்கு சூடானின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் பாரிய குடிநீர் பற்றாக்குறையினை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.