சமூக ஊடகங்களில் ஒன்றான எக்ஸ் தளம் வெனிசுவெலாவில் 10 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் தேசிய தொலைத் தொடர்பு ஆணைக்குழு எடுத்த தீர்மானத்திற்கு, ஆதரவளித்து அதில் கையெழுத்திட்டுள்ளதாக வெனிசுவெலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அரச தொலைக்காட்சி ஒன்றில் உரையாற்றிய அவர், எக்ஸ் சமூக ஊடகம் 10 நாட்களுக்கு வெனிசுலாவிலிருந்து வெளியேறும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நிக்கலஸ் மதுரோ வெற்றிபெற்றிருந்தார்.
எனினும் இந்தத் தேர்தல் முடிவில் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும், அந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவளித்தும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த ஆர்ப்பாட்டங்களில் இதுவரை 23பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெனிசுவெலாவின் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.