இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

0
4

புத்தளம், கற்பிட்டி – அல்மனார் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (21) மாலை காட்டுப்பகுதியில் உள்ள மரமொன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கற்பிட்டி – அல்மனார் பகுதியில் வசித்து வந்த எம்.ஆர்.எம்.பஸால் (வயது 37) எனும் இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனக் கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் செவ்வாய்க்கிழமை (20) இரவு வீட்டை விட்டு துவிச்சக்கர வண்டியொன்றில் வெளியேறிச் சென்றிருந்ததாகவும், அதனையடுத்து அவர் வீடு திரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டவரின் தாய் மற்றும் உறவினர்கள் அவரைத் தேடியுள்ளனர் என்றும் நேற்று கற்பிட்டி – அல்மனார் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் குறித்த நபர் மரமொன்றில் தொங்கிய நிலையில் இருப்பதனை அவரது சகோதரர் கண்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

பின்னர், இதுபற்றிக் கற்பிட்டி பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த கற்பிட்டி பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.

மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டவருக்குச் சொந்தமானது எனத் தெரிவிக்கப்படும் துவிச்சக்கர வண்டியும், இரண்டு பாதனிகளும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

மேலும், சடலமாக மீட்கப்பட்டவரின் இரண்டு கைகளும் கட்டப்பட்டிருந்ததாகவும், இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

அத்துடன், கற்பிட்டி பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.எம்.நாசிம் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து, அங்கு முதற்கட்ட மரண விசாரணையை நடத்தி, புத்தளம் மாவட்ட நீதிவானின் உத்தரவுக்கமைய சடலத்தைப் புத்தளம் தள வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here