புத்தளம் – மன்னார் வீதியின் 4 ஆம் கட்டை பகுதியில் வசித்து வந்த இளம் தாயொருவர் மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகி நேற்று (09) இரவு உயிரிழந்துள்ளார்.
பாபு துஷ்யந்தினி (வயது 28) எனும் இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளம் தாய் நேற்றிரவு இரவு சாப்பாட்டுக்காக ரைஸ் குக்கரில் சோறு சமைப்பதற்காகத் தயாரான போது திடீரென மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, குறித்த இளம் தாய் உடனடியாகப் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் அங்குச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாம் மரண விசாரணைகளை முன்னெடுத்தார்.
அத்துடன், உயிரிழந்த இளம் தாயின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர்க் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.