இந்திய பொதுத்தேர்தலுக்குச் சில வாரங்களே உள்ள நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் அமுலுக்கு வந்துள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டமூலம் முன்வைக்கப்பட்ட நிலையில், பல எதிர்ப்புக்கு மத்தியில் 2019ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்தநிலையில், குறித்த சட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட போதிலும், இன்றைய தினம் முதல் அமுலுக்கு வந்துள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அண்டை நாடுகளில் சிறுபான்மையான இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் இந்தியாவுக்குச் சென்று 5 வருடங்கள் தங்கியிருந்தாலே அங்கு அவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதற்கு இந்தச் சட்ட திருத்தம் அனுமதிக்கின்றது.
குறித்த சட்டத்திற்குத் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.