இலங்கையில் இவ்வருடம் இரு தடவைகள் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, வெள்ளங்களைக் கட்டுப்படுத்த சரியான மற்றும் நிலையான வேலைத்திட்டம் அவசியம் என வலியுறுத்தினார்.
இன்று (14) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற அனர்த்த முகாமைத்துவ மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் நடந்த கலந்துரையாடலில், கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் களுத்துறை மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் பணியை முதன்மைப்படுத்துமாறு கூறினார்.
அதற்குப் பின்னர்ச் சேதமடைந்த சொத்துகளைப் புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மேலும் நிதி தேவைப்பட்டால், 50 மில்லியன் ரூபாவுக்கு மேலதிக நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தார்.
மேலும், கடந்த வெள்ளத்தின் போது சேதமடைந்த சொத்துக்கள் புனரமைக்கப்படாத மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து, அதற்கான இழப்பீடுகளை வழங்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளிடம் பணிப்புரை வழங்கினார்.