இரண்டு பொறியியலாளர்கள் பயணித்த கெப் வண்டியொன்று இன்று (10) காலை தெற்கு அதிவேக வீதியின் கொட்டாவை பகுதியில் திடீரெனத் தீப்பிடித்து எரிந்துள்ளது. தீயினால் கெப் வாகனம் தீக்கிரையாகியுள்ளதாக அத்துருகிரிய அதிவேக வீதி கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தீ விபத்தில் கெப் வண்டியில் பயணித்தவர்களுக்குக் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.
கொழும்பு பிரதேசத்தில் உள்ள நிறுவனமொன்றின் பொறியியலாளர்கள் இருவர் காலி பிரதேசத்தில் வர்த்தகர்களுக்கான பயிற்சி பட்டறை ஒன்றை நடத்துவதற்காகச் சென்று கொண்டிருந்த போது, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது
இரண்டு பொறியாளர்கள் மற்றும் சாரதியும் கெப் வாகனத்தை விட்டு வெளியே வந்தவுடன் வாகனத்தின் முன்பக்கத்தில் இருந்து புகை வந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதையடுத்து உடனடியாகத் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுத் தீயை அணைத்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனத்தின் சுமார் 75 % தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
இயந்திரக் கோளாறு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தீ விபத்துக் காரணமாகக் கடுவெலயிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற வாகனங்கள் சுமார் 15 நிமிடம் நிறுத்தப்பட்டதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அத்துருகிரிய அதிவேக வீதியின் கட்டுப்பாட்டு மத்திய நிலையம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.