இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அரச பாடசாலையில் கல்வி பயிலும் 10 ஆம் தர மாணவன் சக மாணவனைக் கூரிய ஆயுதத்தினால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவு இடைவேளையின்போது இரு மாணவர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டபோது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த 15 வயது மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கிய மாணவனும் அவரது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சில குழுக்கள் பாடசாலை அமைந்துள்ள பகுதியில் போராட்டங்களை மேற்கொண்டுள்ளதுடன், சில வாகனங்களுக்குத் தீவைத்துள்ளனர்.
பின்னர்ப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்திய நிலையில் குறித்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் இது மதக் கலவரமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உதய்பூரில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வதந்திகள் பரவாமல் இருக்க இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.