யாழ்ப்பாணம் – தெல்லிப்பளையிலுள்ள பெண்கள் மற்றும் சிறுவர் விடுதியை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அந்த விடுதியின் குளியலறையில் பொருத்தப்பட்டிருந்த சீசீடிவி கமரா கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன.
தெல்லிப்பளை பிரதேசத்தில் பராமரிக்கப்பட்டு வந்த இந்த நிலையம் தொடர்பில் இதற்கு முன்னரும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சிறுவர் மற்றும் நன்னடத்தைப் பிரிவிற்கும், வடமாகாண ஆளுநருக்கும் இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில், அளிக்கப்பட்ட முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் உண்மை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையைப் பெற்றுக்கொண்ட ஆளுநர், உடனடியாக அவ்விடுதியை மூடிவிட்டு, அதன் பொறுப்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு பெண்கள் மற்றும் சிறுவர் அதிகார சபைக்கு அறிவித்துள்ளார்.