ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள பிரபல பாடசாலை மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் தாக்குதலுக்கு உள்ளாகிய நான்கு மாணவர்கள் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று (01) மூன்று மணியளவில் இடம்பெற்றதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ஒரே பாடசாலையில் கல்வி பயின்று வரும் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும், பாடசாலை நேரம் நிறைவடைந்து வீடு திரும்பி கொண்டிருந்த நிலையில், ஹட்டன் பேருந்து நிலையத்தில் வைத்து ஒரு மாணவன் கத்தியால் மற்றொரு மாணவனைத் தாக்கியுள்ளார்.
இந்த மோதலில் நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு மாணவனுக்குக் கைபகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று மாணவர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மொத்தம் நான்கு மாணவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தாக்குதல் மேற்கொண்ட மாணவனை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளதோடு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.