வைத்தியசாலை ஏற்றுக்கொள்ளாத குழந்தை பலி!

0
6

2 மாத குழந்தை பால் அருந்தும் போது ஏற்பட்ட சிக்கல் காரணமாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அந்த வைத்தியசாலை குழந்தைக்குச் சிகிச்சை வழங்க மறுத்ததை அடுத்து, குழந்தை வேறு ஒரு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போது உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மாத்தறை புதிய மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட குழந்தையைச் சிகிச்சைக்காக ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மாத்தறை கம்புருகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 2 மாதம் 27 நாட்களை உடைய இரட்டைக் குழந்தைகளில் மூத்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இந்தக் குழந்தைக்கு நேற்று (03) காலை பால் கொடுக்கப்பட்ட போது பால் இறுகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பெற்றோர் உடனடியாகக் குழந்தையை முச்சக்கர வண்டியில் மாத்தறை கொட்வில பிரதேசத்தில் அமைந்துள்ள மாத்தறை புதிய மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது குழந்தையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அப்போது அவசர சிகிச்சைப் பிரிவு செயல்படவில்லை என்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் கூறியதாகப் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

பின்னர்க் குழந்தையை அம்பியூலன்சில் வேறு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்குமாறு பெற்றோர் கேட்ட நிலையில் அதற்கும் வைத்தியசாலை பாதுகாப்புப் பணியாளர்கள் மறுத்துள்ளனர்.

பின்னர்ச் சுமார் 10 கிலோ மீற்றர் தூரம் பயணித்துக் குழந்தையை மாத்தறை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

அதற்குள் குழந்தை இறந்துவிட்டதாகவும், 30 நிமிடங்களுக்கு முன்னதாக அழைத்து வந்திருந்தால் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை மாத்தறை பொது மயானத்தில் குழந்தையின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன.

இது பால் இறுகியதில் ஏற்பட்ட மரணம் எனப் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாத்தறை புதிய மாவட்ட வைத்தியசாலையில் பிறந்த குழந்தை ஒன்று காணாமல் போனமை தொடர்பில் கடந்த மாதம் செய்தி வௌியாகியமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here