குவைத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 40 இந்தியர்களும் அடங்குவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குவைத்தின் தெற்கு மங்காஃப் மாவட்டத்தில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில் 50 பேர் வரை காயமடைந்ததாகக் குவைத் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நிர்மாணப்பணிகள் இடம்பெற்று வந்த குறித்த கட்டடத்தில் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 190 தொழிலாளர்கள் தங்கியிருந்ததாகத் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தைப் பார்வையிட்ட குவைத்தின் துணைப் பிரதமர் ஷேக் ஃபஹாத் அல்-யூசுப் அல்-சபா குறித்த கட்டடத்தின் உரிமையாளரைக் கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.கட்டடத்தின் நிர்மாணிப்பணிகளைப் பொறுப்பேற்றுள்ள நிறுவனம் பல விதி மீறல்களை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.