இந்தியா : உத்தரப் பிரதேசத்தின் ஹாப்பூரைச் சேர்ந்த ஒருவர், தன் இரண்டு மகள்களுக்கு ஒரே நாளில் நேற்று திருமண ஏற்பாடு செய்தார். முதல் பெண்ணின் திருமணம் சுமுகமாக நடந்து முடிந்த நிலையில், இரண்டாவது பெண்ணின் திருமணம், ஒரு முத்தத்தால் கலவரத்தில் முடிந்தது. திருமணச் சடங்கின் போது, மாப்பிள்ளை மற்றும் பெண் ஆகியோர் சந்திக்கும் நிகழ்வு நடந்தது. முதன்முதலாக இருவரும் சந்தித்தபோது, சற்றே உணர்ச்சிவசப்பட்ட மணமகன், மணமகளுக்கு முத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பெண் வீட்டார், மணமகன் குடும்பத்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மணமகளின் விருப்பத்தின்படி முத்தம் கொடுத்ததாக மணமகன் கூறினாலும், அதை யாரும் ஏற்கவில்லை. முடிவில், இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். இதில், மணமகனின் தந்தை உட்பட இரு வீட்டார் தரப்பிலும் பலர் காயமடைந்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் , பொது இடத்தில் தொந்தரவு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.