நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து தனிப்பட்ட முறையில் 60 கோடி ரூபாயைப் பெற்றுக்கொண்டுள்ளதாக ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியே தமக்கு வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
தம்மால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளைக் கருத்திற்கொண்டு, வழங்கப்பட்ட அந்த நிதியில் தற்போது மாவட்டத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன இந்தநிலையில் அரசியல் நோக்கத்திற்காகக் கோவிந்தன் கருணாகரம் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.