ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படாததாலேயே சஜித் பிரேமதாசவுக்கு எதிராகச் சேறுபூசும் நடவடிக்கையில் சரத் பொன்சேகா ஈடுபட்டுள்ளார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
“கட்சியில் பல சிரேஷ்ட உறுப்பினர்கள் இருக்கையில் தியாகங்களுக்கு மத்தியிலேயே பொன்சேகாவுக்குத் தவிசாளர் பதவி வழங்கப்பட்டது. எனினும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொன்சேகாவுக்கு ஆசை வந்துவிட்டது. அவர் வேட்பாளர் பதவியை எதிர்பார்த்திருந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளராகச் சஜித்தை களமிறக்க தீர்மானித்தது. ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. இதனைத் தாங்கிக்கொள்ள முடியாததாலேயே அரசுடன் இணைந்து சஜித்துக்கு எதிராகப் பொன்சேகா பிரச்சாரம் செய்கின்றார்.
கசினோகாரர்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளுடன் சஜித்துக்குத் தொடர்பு இல்லை.கசினோ காரர்களால் ஆரம்பிக்கப்படும் கூட்டணியில்தான் பொன்சேகா விரைவில் இணைய உள்ளார் எனவும் தெரிவித்தார்.