புத்தளம் – மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமீரகம கிராம மையவாடிக்கு அருகில் உள்ள வீதியில் இளம் பெண்ணின் சடலமொன்று இன்று (21) காலை மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். சமீரகம பகுதியில் உள்ள தென்னைத் தோட்டமொன்றில் வசித்து வந்த 26 வயதான பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் குறிப்பிட்டனர்.
மதுரங்குளி பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இன்று (21) அதிகாலை 3.30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறிய குறித்த இளம் பெண், மீண்டும் வீடு திரும்பாததை அடுத்து, கணவர் தனது மனைவியைத் தேடியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையிலேயே குறித்த பெண் இருந்த தோட்டத்திற்கு முன்னால் உள்ள வீதியில் காணப்பட்ட வெள்ளநீருக்குள் வீழ்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளம் பெண்ணுக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்படுவதாகக் குடும்பத்தாரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
அத்துடன், சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிஸாம், மரண விசாரனைகளை மேற்கொண்ட பின்னர் , சடலத்தைப் பிரேத பிரசோதனைக்காகப் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
சடலம் பிரேத பிரசோதனைக்காகப் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.