தமது திட்டமிட்ட வேலை நிறுத்த போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடுவதற்கு இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விளக்கமளிக்கையில், புகையிரதப் பொது மேலாளருடனான கலந்துரையாடலின் போது, எங்களின் சில கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில்கள் கிடைத்தன. இருப்பினும், பதவி உயர்வுகள் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து அவர்களால் ஒரு குறிப்பிட்ட பதிலை வழங்க முடியவில்லை.
இந்தக் கலந்துரையாடலில் பதில் அமைச்சர் பங்கேற்று, திணைக்களத்தினால் அனுப்பப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கும் அமைச்சினால் அனுப்பப்பட்ட கடிதத்திற்கும் இடையில் முரண்பாடு காணப்படுவதாகவும் அவர் மேலும் விளக்கமளித்தார். இந்த முரண்பாடே தற்போதைய பிரச்சினைக்குக் காரணம்” என்று சோமரத்ன குறிப்பிட்டார்.
திருத்தம் ஒன்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள பொதுச் சேவை ஆணைக்குழு கூட்டத்தின் போது அது குறித்துப் பரிசீலிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். “ரயில்வே சேவை எதிர்கொள்ளும் ஒட்டுமொத்த சவால்களைத் தீர்க்காமல் தனிப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் இருந்து பிரச்சனைகள் உருவாகின்றன,” எனவும் சோமரத்ன தொடர்ந்து கூறினார்.