உற்பத்தி மற்றும் கடற்றொழில் துறைக்குத் தொடர்புடையதாகக் கொரிய மொழி தேர்ச்சி பரீட்சையின் பெறுபேறு வெளியிடப்பட்டுள்ளதுடன் பரீட்சை எழுதியவர்களில் 95வீதமானவர்கள் சித்தியடைந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டு இடம்பெற்ற கொரிய மொழி தேர்ச்சி பரீட்சைக்காக 3580 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர். அதில் 3422 பேர் சித்தியடைந்துள்ளனர். இது பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 95.6 வீதமாகும். இந்தப் பரீட்சையின் பெறுபேறு எதிர்வரும் 27ஆம் திகதி பணியகத்தின் www.slbfe.l என்ற இணையதளத்தில் பதிவிடப்படும். பரீட்சையில் சித்திபெற்ற விண்ணப்பதாரிகளுக்கான மருத்துவப் பரிசோதனை எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.
நேர்முகப்பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் 6,7 மற்றும் 10ஆம் திகதிகளில் பணியகத்தின் மாகாண காரியாலயம், புலம்பெயர்ந்தோர் வள மத்திய நிலையம் மற்றும் பயிற்சி நிலையங்களில் இடம்பெறும் எனவும் பணியகம் தெரிவித்துள்ளது.